சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்குவதற்கு தடை கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம் மனு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் 14-ந்தேதி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறைக்குள் புகுந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது.

உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், 6 மாத காலமாவது சோதனை அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நவம்பர் 16-ந் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; மத்திய பாதுகாப்புப் படைக்காக ரூ16 கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். வரும் 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோருகிற டெபாசிட் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும்; அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications