‘மக்கள் முதல்வரை’ வணங்கி பேச்சைத் தொடங்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்...
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவின் இருக்கை காலியாக விடப்பட்டது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் மக்களின் முதல்வரை வணங்கி பேச்சை துவக்கியது என நேற்றைய சட்டசபைக் கூட்டம் களை கட்டியது.
மூன்று நாட்கள் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றிலிருந்து சட்டசபை கூட்டத் தொடர் துவங்கி உள்ளது.

முதல் நாளான நேற்று சட்டசபையில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் முதல்வர் பன்னீர் செல்வத்தைக் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. வழக்கம் போலவே அவர்களது பேச்சில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழே நிறைந்திருந்தது.
அமைச்சர்கள் பேசும்போது, 'மக்களின் முதல்வர் இருக்கும் திசை நோக்கி வணங்கி, பேச்சை துவக்குகிறோம்' என்றும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகளுக்கு, பதில் அளிக்கும் போது, 'உங்கள் கோரிக்கையை, மக்களின் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, பரிசீலிக்கிறோம்' என்றும் கூறினர்.
தப்பித் தவறி கூட ஒருவரும், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறாதது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவர்கள் தான் இப்படி என்றால், முதல்வர் பன்னீர்செல்வம், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளிக்கும்போது, அவரும் தன் பங்கிற்கு ஜெயலலிதாவை புகழ்ந்த பின்னரே, தன் பதிலுரையை துவக்கினார். மேலும் தன் பேச்சை துவக்கும் போது, ஜெயலலிதாவை, 'மக்கள் முதல்வர்' என்றே குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications