உரிமை மீறல்: கருணாநிதிக்கு கண்டனம் மட்டுமே.. நடவடிக்கையில்லை- சபாநாயகர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அவர் மீது கண்டனம் தெரிவித்ததோடு சட்டசபை நிறுத்திக் கொண்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னதாக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. அமைச்சர் பேசாததை பேசியதாக குறிப்பிட்டதாக கருணாநிதிக்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறிய சபாநாயகர், கருணாநிதியின் வயதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சில ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்ததாக கருணாநிதி புகார் கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை முரசொலி இதழில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சட்டசபையில் தான் பேசாத விஷயங்களை பேசியதாக கருணாநிதி அறிக்கையில் கூறி இருப்பதாகவும் அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாகவும் கடந்த செப்டம்பர் 4ம்தேதி சபாநாயகர் தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் கொடுத்திருந்தார்.
இந்த பிரச்சனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த விவர அறிக்கையை புத்தகமாக அச்சிட்டு சட்டசபையில் இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமைக்குழு பேரவை உரிமைக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து அவர்கள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து வெளியேற்றப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. அமைச்சர் பேசாததை பேசியதாக குறிப்பிட்டதாக கருணாநிதி சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறினார். மேலும், கருணாநிதியின் வயதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications