தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேருக்கு சட்டசபை உரிமைக் குழு நோட்டீஸ்!
சென்னை: சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட்டது தொடர்பாக தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏக்கள் 6 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மோகன்ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தெரிவித்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.கவின் கடம்பூர் ராஜூ பேசுகையில் 'குடிமகன்' என்று விஜயகாந்தை விமர்சித்ததையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்க கோரினர்.
இதை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் சில தே.மு.தி.க.வினர் அடுத்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட்டது குறித்து விளக்கம் கேட்டு தே.மு.தி.க.வின் 6 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏக்கள் மோகன்ராஜ், சந்திரகுமார், சேகர், தினகரன், பார்த்திபன், வெங்கடேஸ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வரும் 27-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் ஆலோசனை
இதனிடையே உரிமைக் குழு நோட்டீஸ் குறித்து கட்சி எம்.எல்.ஏக்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications