சட்டசபையில் தலைகளை எண்ணும் வெளிப்படையான நம்பிக்கை வாக்கெடுப்பு!
சென்னை: சட்டசபையில் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 'தலைகளை' எண்ணும் வெளிப்படையான நடைமுறைதான் பின்பற்றப்பட இருக்கிறது. ஆனால் ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணி மற்றும் திமுக வலியுறுத்தி வருகின்றன.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சற்று நேரத்தில் சட்டசபை கூடுகிறது.
சட்டசபை காலை 11 மணிக்கு கூடியதும் முதலில் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமது அரசின் மீதான நம்பிக்கை கோரி தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றுவார். அப்போது தமது அரசுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பார்.

பின்னர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இதர கட்சி தலைவர்கள் உரையாற்ற அனுமதி அளிக்கலாம். இதன் முடிவில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
பொதுவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது 3 நடைமுறைகளில் இருக்கும். முதலாவது ரகசிய வாக்கெடுப்பு நடைமுறை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஆதரவா? இல்லையா? என்பதை துண்டு சீட்டில் எழுதி தெரிவிக்கும் நடைமுறை.
அடுத்தது குரல் வாக்கெடுப்பு நடைமுறை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஆதரிப்போர் ஆம் என்றும் எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் எழுப்புவர். இதனை சபாநாயகர் கணக்கிட்டு முடிவை அறிவிப்பார்.
தலைகளை எண்ணுதல்
மூன்றாவதாக தலைகளை எண்ணும் நடைமுறை பின்பற்றப்படும். தற்போதைய சட்டசபையானது 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 234 பேர் இந்த 6 பிரிவுகளில் அமர முடியும்.
6 பகுதிகளாக...
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கவும் என சபாநாயாகர் அறிவிப்பார். உடனே சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆதரிப்போர்,எழுந்து நிற்க கூறுவார். அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்து உறுதி செய்து கொள்வார். இப்படி மொத்தமாக 6 பிரிவுகளிலும் ஆதரிப்போர் எத்தனை பேர்? எதிர்ப்போர் எத்தனை பேர்? என கணக்கிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த நடைமுறைதான் சட்டசபையில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ரகசிய வாக்கெடுப்பு
ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நேற்று சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியிருந்தது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் வரவேற்போம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications