சுவாதி கொலையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: தமிழிசை ஆவேசம்
சென்னை: இன்போசிஸ் ஊழியல் சுவாதி கொலையை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். சுவாதி கொலைக்கு நீதி கேட்டும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தமிழிசை "தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் விட்டால், வழக்குகள் எண்ணிக்கை குறைந்ததை போல காண்பிக்க முடியும்.
பதிவான 90 சதவீத வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று ஹைகோர்ட்டே கூறியுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது என்று கூறிவரும், முதல்வர் இதற்கு, பதில் சொல்ல வேண்டும். அதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணும் ஜெயலலிதாவை மன்னிக்க மாட்டார்கள்.
சுவாதி நடத்தை குறித்து ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கண்டதையும் எழுத கூடாது. தனது மகளுக்கு நேர்ந்ததை போன்ற கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று கூறி, சுவாதியின் தந்தை, குலுங்கி குலுங்கி அழுகிறார். அவரது கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications