சபாஷ்.. பாஜகவின் பகீர் முகத்தை தமிழகத்திற்கு தோலுரித்து காட்டிய தமிழிசை! #ThankyouTamilisai
கர்நாடக தேர்தலுக்காகவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறிய தமிழிசை, அடுத்து கூறியதுதான் டாப், "இது எல்லா கட்சிகளும் செய்யும் அரசியல்தான்" என்றும் கூறியுள்ளார். பாவம், அமித்ஷா.
Recommended Video
சென்னை: பாஜகவின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்துள்ளார் அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக தமிழகம் அவருக்கு கடமைப்பட்டுள்ளது.
"party with difference" என்ற முழக்கத்தை முன் வைத்துதான், காங்கிரஸ் இல்லா பாரதம் தேவை என அறிவித்தது பாஜக. அது என்ன, party with difference?
பாஜக மட்டுமே பிற கட்சிகளில் இருந்து வித்தியாசமானது என்பதுதான் அதன் பொருள். மாற்றத்தை விரும்பிய மக்கள் அதற்காகவே பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர வைத்தனர். ஆனால், அந்த கோஷம், தேர்தலுக்கான வெற்று மாயாஜாலம் என்பது சில காலங்களிலேயே அம்பலமானது. காங்கிரஸ் அறிமுகம் செய்த ஆதார், ஜிஎஸ்டி போன்றவற்றை தொடர்ந்தது பாஜக அரசு, அதிலும் முன்னைவிட வீரியமாக.
வெளியுறவு நிலை
வெளியுறவு கொள்கைகளில் ஒரு மாற்றமும் இல்லை. மாற்றம் வரும் என காத்திருந்த தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுதான் வருகிறார்கள். பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க நடவடிக்கை இல்லை. சீன பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் போய்கொண்டுள்ளது. தேசியவாதம் பேசிய பாஜக, காங்கிரசை போலவே, அன்னிய முதலீடுகளை தாராளமாக திறந்துவிட்டது.
சீனாவுக்கு சந்தை இந்தியா
சீன பட்டாசுகளால் சிவகாசி வரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் சமீபத்திய உதாரணம், பிளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியுள்ளது. வால்மார்ட்டின் மிகப்பெரிய சப்ளையர் சீனா. அந்த நாட்டு தொழில் வளர இந்தியா சந்தை அமைத்து கொடுத்துள்ளது. வெளிநாட்டு நிதி அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக கிடைக்க சட்ட திருத்தத்தை கொண்டு வந்து, நாங்க காங்கிரசுக்கே அண்ணன் என காட்டியுள்ளது பாஜக அரசு. இதில் எங்கே உள்ளது வித்தியாசம். அயலக கொள்கை, பொருளாதார கொள்கைதான் இப்படி என்றால், உள்நாட்டு கொள்கையும் அப்படியேதான்.
உள்நாட்டு கொள்கையும் பல் இளிக்கிறது
நதிநீர் கொள்கைகளில் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்ற காங்கிரஸ் தலைமையிலான அரசின் அதே கொள்கையைத்தான் பாஜகவும் பின்பற்றி வருகிறது. உதாரணம், காவிரி பிரச்சினை. உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பை அமல்படுத்த இன்னும் திட்டம் வகுக்கவில்லை. கர்நாடக தேர்தல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தபோது, இல்லை, இல்லை, இது வித்தியாசமான கட்சி என முட்டுக்கொடுத்தனர் ஆதரவாளர்கள்.
அம்பலப்படுத்திய தமிழிசை
ஆனால், இன்றோ தமிழகம் தமிழிசைக்கை நன்றி சொல்லும் தருணம் வந்துவிட்டது. பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளார் தமிழிசை. சபாஷ். கர்நாடக தேர்தலுக்காகவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறிய தமிழிசை, அடுத்து கூறியதுதான் டாப், "இது எல்லா கட்சிகளும் செய்யும் அரசியல்தான்" என்றும் கூறியுள்ளார். பாவம், அமித்ஷா. "party with difference" என ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனில் ஓட்டை போட்டு டமால் என உடைத்துவிட்டார் தமிழிசை. எல்லா கட்சிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துவிட்டார் பாஜக மாநில தலைவர். இது தேசிய அளவில் பாஜகவின் பிரச்சார யுக்திக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி.
விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளார்கள்
கர்நாடக தேர்தல் வெற்றிக்காக தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ஜீவாதார நீரை தடுத்து வைத்துள்ளது என்பதுதான் தமிழிசையின் பேட்டி சாராம்சம். இது இன்னும் மோசம். தேர்தலுக்காக தமிழ் விவசாயிகள் வாயிலும், வயிற்றிலும் அடிக்கப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக கூறுகிறார்கள் என்றால் இனியும் எப்படி தாமரை தமிழகத்தில் மலரும் என்று இவர்களால் பிரசாரம் செய்ய முடியும்? மற்றவர்கள் எதுவும் செய்யாமல் போனதால்தான் மத்தியில் காங்கிரஸை அகற்றி விட்டு மக்கள் பாஜகவை அமர்த்தினர். ஆனால் பாஜகவும் அதே துரோகத்தை மக்களுக்கு செய்தால் மீண்டும் பாஜக விரட்டியடிக்கப்படும் என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி தலைவராக இருந்தாலும், ஒரு தமிழச்சி என்ற முறையில், தனது கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்திய தமிழிசைக்கு ஹேட்ஸ்ஆப்!