இழுத்தடிக்கும் விஜயகாந்த்துக்கு ஆப்படிக்கும் தமிழக பாஜக..!
சென்னை: தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவதாக இருந்தால் பாஜக தலைமையிடமே பேசிக் கொள்ளட்டும். இனிமேல் நாமாக தேடிப் போக வேண்டாம் என்ற அதிரடி முடிவுக்கு தமிழக பாஜக வந்து விட்டதாம்.
இதுதொடர்பான முடிவை மத்திய தலைமையிடமும் அது தெரிவிக்கவுள்ளதாம். மேலும் தமிழக பாஜக தலைமைக்குத் தெரியாமல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரகசியமாக சென்னைக்கு வந்து போனதையும் தமிழக பாஜக தலைமை சீரியஸாக எடுத்துள்ளதாம்.
ஜவடேகரின் செயலால் தமிழகத்தில் பாஜகவின் பெயரும், இமேஜும் கெட்டுப் போய் விட்டதாகவும், பெரும் அவமானத்தை ஜவடேகர் ஏற்படுத்தி விட்டதாகவும் தமிழக தலைவர்கள், பாஜக தலைமையிடம் புகாராகக் கூறப் போகிறார்களாம்.

வரலாறு காணாத ஜவ்வு மிட்டாய்
இப்படி ஒரு ஜவ்வு மிட்டாய் அரசியலை தமிழக அரசியல் களம் இதுவரை கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை பேரையும் தேமுதிக இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

தனியாக நின்றால் ஒரு சீட்தான்!
தனித்துப் போட்டியிட்டால் விஜயகாந்த்தைத் தவிர ஒருவரும் வெல்ல முடியாது என்றாலும் கூட பந்தாவுக்கு குறைச்சலே இல்லாமல் தேமுதிக காலரை தூக்கி விட்டு்க கொண்டு திரிகிறது.

பின்னாடியே திரியும் திமுக, பாஜக
இப்படிப்பட்ட தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க திமுகவும், பாஜகவும் அடித்துப் புரண்டு கொண்டுள்ளன. இரு தரப்பும் மிகக் கடுமையான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

கொந்தளித்த பாஜக
ஆரம்பத்திலிருந்தே விஜயகாந்த் இழுத்த இழுப்புக்கெல்லாம் போன கட்சி பாஜக. ஆனால் விஜயகாந்த் தரப்போ பாஜகவை மரியாதையாக நடத்தியது போலவே தெரியவில்லை. ஆனால் தேமுதிகவின் போக்கால் தற்போது தமிழக பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தமிழக தலைமையை ஓரம் கட்டி விட்டு
தமிழகத் தலைமையை ஓரம் கட்டி விட்டு பிரேமலதாவும், முரளிதர ராவும்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. அவர்கள் இருவரும்தான் டீலிங் பேசி வந்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

ஜவடேகரால் வந்த கேவலம்
இந்த நிலையில் பிரகாஷ் ஜவடேகரால் இருந்த கொஞ்ச நஞ்சப் பெயரையும் தமிழக பாஜக கெடுத்துக் கொண்டு விட்டது. இருமுறை தமிழகம் வந்த இவர் முதல் முறை விஜயகாந்த்தைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாக பேசி விட்டுச் சென்றார்.

ரகசியப் பயணத்தால் வந்த வினை
இந்த நிலையில் 2வது முறையாக ரகசியப் பயணமாக வந்தார் ஜவடேகர். தமிழக பாஜக தலைமைக்குக் கூட தெரிவிக்காமல் அவர் சென்னை வந்து பிரேமலதா, விஜயகாந்த் ஆகியோரைச் சந்தித்தது தமிழக பாஜக தலைவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய குழு அவசரக் கூட்டம்
இந்தப் பின்னணியில் சென்னையில் மாநில மையக் குழுக் கூட்டத்தை தமிழக பாஜக கூட்டியது. அதில் ஜவடேகரின் செயல், தேமுதிகவின் இழுபறி குறித்து விவாதிக்கப்பட்டது.

அனைவரும் ஒரே குரலில் கோபம்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன்,மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன் என அனைவருமே ஜவடேகரின் செயல்குறித்து அதிருப்தி தெரிவித்து பேசியுள்ளனர்

அவமானம்
ஜவடேகரின் செயலால் தமிழகத்தில் பாஜகவுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதாக அனைவரும் குமுறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் புகார் கூறவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தேவையானால் அங்கே போய்ப் பேசட்டும்
அதேபோல தேமுதிகவுக்கும் ஆப்பு வைப்பது போல இனிமேல் நாமாக தேமுதிகவைத் தேடிப் போக வேண்டாம். கூட்டணி வேண்டும் என்றால் அவர்களே டெல்லிக்குப் போய் பேசிக் கொள்ளட்டும் என்ற முடிவையும் எடுத்துள்ளனராம்.

ஜவடேகர் நீக்கப்படுவாரா?
தமிழக பாஜக தலைமை ஒட்டுமொத்தமாக கோபமடைந்திருப்பது கட்சித் தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். இதை சரிசெய்ய தமிழக பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜவடேகர் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications