ஆர்.கே.நகரில் முகம் கொடுக்காத வாக்காளர்கள்.. கண்டுகொள்ளாத டெல்லி மேலிடம்: விரக்தியில் தமிழக பாஜக
ஆர்கே நகர் தொடர்பான உளவுத்துறை அறிக்கையால் பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகரில் வாக்காளர்கள் முகம் கொடுப்பதும் இல்லை; டெல்லி மேலிட தலைவர்களும் கண்டுகொள்வதில்லையே என விரக்தியில் இருக்கிறதாம் தமிழக பாஜக.
ஒட்டுமொத்த பாஜக தேசிய தலைவர்களுமே குஜராத் குளிர் ஜூரத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர்களை உச்சகட்ட கோபத்தில் தள்ளிவிட்டிருக்கிறது தமிழக ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை.
விரட்டும் வாக்காளர்கள்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சொந்த கட்சி வேட்பாளர் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பதில் தொடங்கி விரட்டி அடிக்காத குறையாக வாக்காளர்கள் முகம் கொடுத்தும் பேசுவதில்லை வரை விரிவாக பேசுகிறதாம் அந்த உளவுத்துறை அறிக்கை. அதுவும் ஆர்கே நகரில் பாஜகவினர் பேசும் வளர்ச்சி போன்ற கோஷங்கள் வாக்காளர்களை ரொம்பவே முகம் சுளிக்க வைக்கிறதாம். அப்படி என்றால் என்ன என விளக்கம் கேட்டு விரட்டியடிக்கிறார்களாம்.
கண்டுகொள்ளாத டெல்லி
அத்துடன் பாஜகவுக்கு மிக அதிகபட்சமாக ஆர்.கே.நகரில் 1.5% வாக்குகள்தான் கிடைக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறது உளத் துறை அறிக்கை. இதனால் ஆர்கே நகர் தேர்தலை டெல்லி மேலிடம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லையாம்.
டாட்டா காட்டிய டெல்லி
இதைக்கூட உணர்ந்து கொள்ளாத தமிழக பாஜகவினர், மத்திய அமைச்சர்களை அனுப்புங்கள்.. நிலைமை சரியாகிவிடும் என ரீல் விட்டிருக்கின்றனர். இதை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துவிட்டு, அவங்களுக்கு ரொம்பவே வேலை அதிகமாக இருக்கிறது என டாட்டா காட்டிவிட்டதாம் டெல்லி.
ரத்துக்காக காத்திருப்பு
நாங்களும் தேர்தலை சந்திக்கிறோம்.. நாங்களும் பிரசாரத்துக்கு போகிறோம் என வெறுப்பாய்தான் பாஜகவினர் ஆர்கே நகரில் வலம் வருகிறார்களாம். இந்த விரக்தியின் உச்சமாகத்தான் எப்படியாவது தேர்தலை ரத்து செய்துவிடமாட்டார்களா? என்பதற்காகவே மறியல், புகார், ஆர்ப்பாட்டம் அனைத்தும் நாடகங்களாம்.. எல்லாவற்றையும் டெல்லியும் பார்த்து கொண்டே இருக்கிறதாம்!