அன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும்... ஜெயலலிதா ரமலான் வாழ்த்து
சென்னை: உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.
இஸ்லாமியப் பெருமக்கள், இப்புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இஸ்லாமியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்குவது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications