ஒரே நாளில் இருமுறை.. தமிழக பொறுப்பு ஆளுநர்-தலைமைச் செயலாளர் சந்திப்பால் பரபரப்பு
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் இன்று, இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டி, பொறுப்பு முதல்வரை நியமிக்க டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இதை ஹைகோர்ட் ஏற்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலாளரை அழைத்து, அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம், சுமார் அரை மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்திய நிலையில், மாலையில், மீண்டும், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் ஆளுநர் மாளிகை வந்தார் ராமமோகன்ராவ்.
அந்த ஆலோசனையின்போதும், தலைமை செயலாளர் உடனிருந்தார். இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications