தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மத்திய அரசுப் பணிக்கு திடீர் மாற்றம்?
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக ஞானதேசிகன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மின்சார வாரியத் தலைவராக இருந்த ஞானதேசிகன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவரை தலைமைச் செயலராக ஜெயலலிதா நியமித்தார்.

ஞானதேசிகனைவிட மூத்த அதிகாரிகள் இருந்த போதும் அவருக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போய்விட்டு ஜாமீனில் வந்த போது முதலமைச்சர் பதவியை இழந்திருந்தார்.
ஆனாலும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்துக்குப் போய் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வந்தவர் ஞானதேசிகன்,.
ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியான ஞானதேசிகனை தற்போது மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் ஒப்புதலுடன் ஞானதேசிகன் மத்திய அரசின் பணிக்கு அனுப்பப்படுகிறாரா? அல்லது வழக்கமான பணி நடைமுறையா என்பது தெரியவில்லை.
இருப்பினும் பாரதிய ஜனதாவுக்கும் அண்ணா தி.மு.க.வுக்கும் இடையே நெருக்கமான உறவு உருவாகி வரும் நிலையில் ஜெயலலிதாவின் விசுவாச முக்கிய அதிகாரி டெல்லிக்கு அழைக்கப்படுவதில் 'லாபி' எதுவும் இருக்கலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications