சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி சென்று மோடியை சந்திக்கிறார். அப்போது அவசரச் சட்டம் பிறப்பிக்க பிரதமரை வலியுறுத்துவார் ஓபிஎஸ்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வீரியம் அடைந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்த உள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. சென்னை மெரினாவில் மாணவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற தொடர் போராட்டங்களை அடுத்து, ஓபிஎஸ் நாளை பிரதமரை சந்திக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை ஓபிஎஸ் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களை கைவிடுமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து பேச உள்ளதை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த வேண்டுகோளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விடுத்துள்ளார்.
மேலும், சட்டத்திருத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்பதையும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications