முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை ராஜினாமா?
சென்னை: தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பின்னர் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஜெயலலிதா, ஆளுநர் ரோசையாவிடம் வழங்குவார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க வருமாறு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார். ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு வசதியாக இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications