எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு சசியை பார்க்க போகவில்லை.. கூவத்தூர் செல்கிறார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்கப் போவதாக கூறப்பட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை சசிகலாவை சந்திக்க செல்லப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறார். பதவியேற்பு நடந்த உடன் பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்கப் போவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் அவர் செல்லவில்லை.
முதல்வராக பதவியேற்ற உடன் தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளியை சந்திக்க செல்வதாக என்ற விமர்சனங்களும் எழுந்தன. பதவியேற்பு முடிந்த உடன் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ரிசார்ட்களுக்கு திரும்பினர். இதனையடுத்து அவர் நேற்றிரவு பூந்தண்டலம் பண்ணை வீட்டில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முள் கிரீடம்
முதல்வராக பதவியேற்ற பின்னரும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு முள் கிரீடம்தான். எதிரணியில் உள்ள ஒபிஎஸ் மக்களிடம் நீதி கேட்டு பயணம் செல்ல உள்ளதாக கூறியுள்ளார். நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே அவரால் வெற்றி பெற முடியும். ஆனால் ஓபிஎஸ் ஆதரவு அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு பயணம் ரத்து
திமுகவும் ஒருபக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்து கொள்வது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்கும் பயணத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பழனிச்சாமி ஆலோசனை
ரிசார்ட்டில் தங்கியுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சந்திக்க அவர் இன்று கூவத்தூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து இன்று எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.