தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து
பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்ப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: முந்தைய பட்ஜெட்டை விட 2017ம் ஆண்டு பட்ஜெட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் அளிக்கப்பட்டுள்ளது, முந்தைய பட்ஜெட்டுக்களை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் இது. சவாலான சூழ்நிலையில் அனைத்து அம்சங்களும் சரியான முறையில் கையாளப்பட்டுள்ளது.
தலித்துக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு செய்ய தேவையான நடவடிக்கை பட்ஜெட்டில் தெரிகிறது. ரயில்வே பட்ஜெட்டுடன் பொது பட்ஜெட்டை இணைத்தது வரவேற்கத்தக்கது.
அதேபோல், பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என்பதை உறுதிபடுத்த வேண்டும். கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவித்திருக்கலாம். தமிழக வறட்சி குறித்து எதுவும் குறிப்பிடாதது வருந்தமளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.