சாமளாபுரத்தில் நியாயமாக போராடிய பெண்ணை அடித்த ஏடிஎஸ்பி... வக்காலத்து வாங்கும் பழனிசாமி!
டாஸ்மாக்கை அகற்றக் கோரி போராடிய பெண்ணின் மீது அடாவடித் தனமாக நடந்து கொண்ட போலீசாருக்கு வக்காலத்து வாங்கும் வகையில் சட்டசபையில் பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி.
சென்னை : திருப்பூர் சாமளாபுரத்தில் நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரிக்கு சாதகமாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பேசியுள்ளார்.
திருப்பூர் அடுத்த சாமளாபுரத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டத்தை கை விடாததால் போலீசார் , பெண்கள் மீது தடியடி நடத்தினர். இந்த தடியடியின் போது அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். பொதுஇடத்தில் பெண் ஒருவரிடம் போலீஸ் அதிகாரி அடாவடித்தனமாக நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காட்டுமிராண்டித்தனம்
பலரின் வாழ்க்கையை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியதால் பெண்ணிற்கு கிடைத்த பரிசு ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் அடித்ததில் அவருக்கு காது கேட்காமல் போனது தான் மிச்சம். காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை கோரி அப்பகுதி மக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் அப்போதே பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணையும் நடத்தினார். பாதிக்கப்பட்ட பெண் ஈஸ்வரி, பொதுமக்கள், ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கவும் பட்டுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய பதவிஉயர்வு
ஆனால் ஏடிஎஸ்பியாக இருந்த பாண்டியராஜனை ஈரோடு மாவட்ட அதிரடிப்படையின் எஸ்பியாக பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டது அரசு. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது கூடவா தெரியாது?
இந்நிலையில் சட்டசபையில் இன்று முதல்வர் பழனிசாமி ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது எந்தப் புகாரும் அளிக்காததால் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அப்படியானால் மாவட்ட வருவாய் அலுவலர் ஏன் விசாரணை நடத்தினார், ஆட்சியரிடம் விசாரணை அளிக்கப்பட்டதெல்லாம் கண்ணாமூச்சி வேலையா. இதெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு வரவில்லையா என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications