கடலோர மாவட்டங்களில் மழை...நீடிக்கும்!
சென்னை: நவம்பர் 30ம் தேதி முதல் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாகவும், சில இடங்களில் மழையும் பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், அண்மையில் உருவான லெஹர் புயல், தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியதால், தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யக்கூடும். இதே போன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையோ, மிதமான மழையோ பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றார்.












Click it and Unblock the Notifications