ஜல்லிக்கட்டு.... நல்ல தீர்ப்பு வரும்! - ஓபிஎஸ் நம்பிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
அப்போது, அவர் தமிழகம் முழுவதற்குமான பொதுவான விஷயம் உள்ளது. அது ஜல்லிக்கட்டுதான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தப் பிரச்சினை. தை மாதம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றீர்கள். ஆனால், அதற்கான எந்த சமிக்ஞையும் வரவில்லை என்றார்.
இதற்கு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதிலுள்ள சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, வாதிடுவதற்கு சட்ட வல்லுனர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்திருக்கிறார், என்றார்.