நெடுவாசலுக்கு சென்ற ஹெச். ராஜாவுக்கு எதிர்ப்பு! இளைஞர்கள் கண்டன முழக்கம்!
நெடுவாசல் போராட்ட களத்துக்குச் சென்ற பாஜகவின் ஹெச். ராஜா இளைஞர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராமத்துக்குச் சென்ற பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெடுவாசலை விட்டு ஹெச். ராஜா வெளியேற வலியுறுத்தி இளைஞர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக 18 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. இல. கணேசன், நாட்டின் நலனுக்காக ஒரு மாநிலம் தியாகத்தைச் செய்யலாம் என கூறியிருந்தார். இந்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்த நெடுவாசல் கிராமத்துக்கு நேரில் சென்றார் ஹெச். ராஜா. அப்போது ஹெச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நெடுவாசலை விட்டு ஹெச். ராஜா வெளியேற வேண்டும் என இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் நெடுவாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.