அ.தி.மு.க.வின் ஆடுபுலி - பா.ஜ.க.வின் போங்கு ஆட்டங்கள்.. உக்கிரத்தில் விவசாயிகள்
சென்னை: தமிழக விவசாயிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய முழு அடைப்புப் போராட்டத்தின் போது அண்ணா தி.மு.கவும் பாரதிய ஜனதாவும் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டங்களால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது அண்ணா தி.மு.க. மட்டும் ஆதரவும் இல்லை.. எதிர்ப்பும் இல்லை என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கர்நாடகா அரசை 'லைட்டா' கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டது தமிழக அரசு. அத்துடன் தமிழக சட்டசபை கூட்டத்தையும் அந்த நாளில் ஒத்தி வைத்தது.
இப்படி அண்ணா தி.மு.க. பந்துக்கு 'ஆதரவா இல்லையா' என குழப்ப வைத்ததற்கு காரணம் கர்நாடகாவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்குதானாம்; விவசாயிகளும் வேணும்; கர்நாடகாவையும் பகைக்க கூடாது என்ற சதுரங்க கூத்துதானாம்.
மேலும் பந்த்தை ஆதரித்தால் உச்சநீதிமன்றம் கண்டிக்கும் என்ற ஒரு அச்சமும் அரசுக்கு இருந்ததாம். அத்துடன் விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்கவே தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு பிரதமரையும் சந்திக்க வைத்ததாம் அண்ணா தி.மு.க. மேலிடம்
அதேபோல் விவசாயிகள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எல்லாம் போய்விட்டு வந்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை பந்த் தேவையில்லை என்று வசனம் பேசியது பாரதிய ஜனதா.
பிரதமர் மோடியை சந்திக்க சென்ற குழுவில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் பிரதமர் சந்தித்துவிட்டார்... விவசாயிகளது அதிருப்தியைத் துடைத்துவிட்டோம் என துள்ளிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.
இருப்பினும் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பந்த் தேவையில்லை; பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.. போராட்ட களமாக்குகிறார்கள் என வைத்த ஒப்பாரி விவசாயிகளை உக்கிரநிலைக்குத் தள்ளியிருக்கிறது.
அண்ணா தி.மு.கவின் ஆடுபுலி ஆட்டமும் பாரதிய ஜனதாவின் போங்கு ஆட்டமும் குறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகளோ, எங்க ஆட்டத்தை தேர்தலில் காட்டுவோம் என்று கண்சிமிட்டுகின்றனர்..












Click it and Unblock the Notifications