கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர் சங்கங்கள் அறிவிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யாததைக் கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்தாலும் அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழகம், இலங்கை மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற கால் நூற்றாண்டு காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம், இலங்கையில் இருந்து செல்லும் மீனவர்கள் கச்சத்தீவிலேயே முகாம்கள் அமைத்து தங்கி விடிய விடிய வழிபாடு நடத்திவிட்டு திரும்புவர்.
நடப்பாண்டுக்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் பங்குத்தந்தை சகாயராஜ் செய்து வருகிறார். ஆனால் இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்கள், 76 படகுகள் விடுவிக்கப்படாததால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கப் போவதில்லை என தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சத்தீவு செல்வதற்கான படகுகளையும் இயக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மீனவர் சங்க நிர்வாகிகளுடன் கச்சத்தீவு விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications