கோவில் விபூதியை அழிப்பதா.. ஸ்டாலின் மீது நடவடிக்கை வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
ஸ்டாலின் நெற்றியில் வைத்த விபூதியை அழித்ததற்கு தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டாலின் நெற்றியில் வைத்த விபூதியை அழித்ததற்கு தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் மு.க.ஸ்டாலினுக்கு கோவில் பணியாளர் விபூதி வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் சில நிமிடத்தில் அதை அழித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு இந்துத்துவா அமைப்புகள், பாஜக கண்டனம் தெரிவித்து இருந்தது.
ஸ்டாலின் நெற்றியில் வைத்த விபூதியை அழித்ததற்கு கோவில் பூஜாரிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இன்றும் அதுகுறித்து பேட்டியளித்தார்.
அதில், மனிதர்கள் தனக்கு பரிகாரம் செய்ய கோவிலுக்கு போவார்கள். ஆனால் கடைசியில் கடவுளுக்கே பரிகாரம் செய்ய வைத்துவிட்டார் ஸ்டாலின். ஸ்டாலின் விபூதியை அழித்து, பெரிய தவறை செய்துவிட்டார்.
அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் அவர் மீது புகார் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மறைமுக கூட்டணி வைத்து செயல்படுகின்றன. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் அதைநோக்கி செல்கிறதா என்று தெரியவில்லை. இங்கு நிறைய போராட்டம் நடக்கிறது, என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.