மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல
சென்னை : மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன. முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் எதுவும் இல்லை. எனவே, புதிய விதிகளை கொண்டு வந்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு மழலையர் பள்ளிக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி, அந்த வரைவு விதிகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள் குறித்து மழலையர் பள்ளிகளின் நிர்வாகங்கள், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்'என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் கால அவகாசம் கேட்டன. இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனியார் பள்ளிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து விட்டதாகவும், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் வகுத்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விதிமுறைகள் என்னென்ன?
புதிய விதிகளின் படி, முறையான அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் 3 மாதத்திற்குள் உரிய அங்கீகாரம் பெற வேண்டும்.
மழலையர் விளையாட்டு பள்ளி செயல்படுத்தும் கட்டிடம் நிர்வாகத்துக்கு சொந்தமானதாகவோ, 5 ஆண்டுகளுக்கும் குறையாமல் குத்தகைக்கு பெறப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு சுற்று சுவர் அவசியம்.
குற்ற பின்னணி உள்ளவர்கள் மற்றும் தோற்று நோய் திக்கப்பட்டவர்கள் பணியில் அமர்த்தக்கூடாது.
பள்ளி அமைந்துள்ள இடத்தில இருந்து ஒரு கிலோ மீட்டம் சுற்று அளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்.
வகுப்பறைக்கு 15 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
குழந்தைகளை அடிக்க கூடாது
இவ்வாறு புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாத பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
இந்த விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications