மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை.... தமிழக அரசு மனு
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை : மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்கில் நினைவிடம் அமைக்க எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மெரினாவில் ஜெயலலிதாவிற்கு சுமார் ரூ.50 கோடி நிதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு உள்ளே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகளையும் அகற்ற வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை மண்டல சட்டத்தின் அடிப்படையில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் எந்த கட்டுமானங்ககளையும் எழுப்பக் கூடாது என்பதால், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகளை அகற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை மண்டல சட்டம், கடந்த 1991-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டம் வருவதற்கு முன்னரே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகள் அனுமதி பெற்று கட்டப்பட்டிருப்பதால், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதிலும் எந்த விதிகளும் மீறப்படவில்லை. அவருக்கு சாலையை நோக்கியே நினைவிடம் அமையவுள்ளது, கடற்கரையை நோக்கி அல்ல என்றும் தமிழக அரசு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications