மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு... அமைச்சர் தங்கமணி விளக்கம்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாக சொல்வதில் உண்மையில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது போல ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
ஊதிய உயர்வு கோரி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதிமுடிவை எட்டிய நிலையில் தொழிற்சங்கத்தினர் மத்தியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் இறுதியாகும் சூழலில் உள்ளது. தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது தான் இயல்பு. சிஐடியூ உள்ளிட்ட 17 தொழிற்சங்கத்தினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
80 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் அனைத்துக்கட்சி கூட்டம் இருந்த போதும் முதல்வர் என்னை ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அனைத்துக் கட்சி கூட்டம் இல்லையென்றால் முதல்வர் முன்னிலையிலேயே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கும்.
தொழிற்சங்கத்தினரை பொறுத்த வரை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன், தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்படும்போதெல்லாம் மின்வாரியத்தின் பணி தான் முக்கியமான பணியாக இருக்கிறது. இது எவ்வளவு கடுமையான பணி, வாழ்க்கையையே தியாகம் செய்யும் அளவுக்கு ஆபத்தான பணி இது என்பது எனக்கு தெரியும்.
வர்தா புயல் மற்றும் ஓகி புயலின் போது அது வந்த சுவடு தெரியாமல் உழைத்து மின்சாரத்தை திரும்பக் கொடுத்தவர்கள் மின்வாரிய ஊழியர்கள். அமெரிக்காவில் கூட புயல் வந்த போது மின்சாரம் திரும்பி வர 15 நாட்கள் ஆனது. ஆனால் 6 மணி நேரத்தில் மின்சாரம் சென்னைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் மின்வாரியப் பணியாளர்களே.
மின்வாரிய பணியாளர்களின் உழைப்பை மதிக்கின்றவன் என்பதால் எதிர்பார்க்கின்ற ஊதியத்தை தர வேண்டும் என்ற காரணத்தால் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று இறுதியாக 2.57 காரணி ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தான் ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள், யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்பது அரசின் எண்ணம் கிடையாது. வேலைநிறுத்தத்திற்கு 2 நாட்கள் முன்பும் கூட மின்வாரிய அலுவலகம் சென்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று அன்பான வேண்டுகோள் விடுத்தேன். வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்கும்.
வெயிட்டேஜை பொருத்தவரை 10 ஆண்டு பணி செய்தால் மட்டும் தான் பண்ம் தர முடியும், ஆனால் இன்று வைரவிழாவை முன்னிட்டு ஓராண்டு ஊதிய உயர்வு வழங்கும் போது 2016ம் ஆண்டு முதலே ஊதிய உயர்வு வழங்கப்படும். வெயிட்டேஜ் எடுக்கப்பட்டு விட்டது என்று நினைக்க வேண்டும், மற்ற கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதனை நிறைவேற்றித் தருவேன் என்றும் தங்கமணி கூறினார். மேலும் மின்வாரியத்தில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் 2வது சனிக்கிழமைகளோடு இனி 4வது சனிக்கிழமையும் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்படும் என்றும் இதற்கு கூடுதலாக 15 நிமிடங்கள் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.