தமிழகத்தில் மொத்தம் 82.36 லட்சம் 'வி.ஐ.பிகள்'.. தலைசுற்றும் புள்ளி விவரம்
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 82 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்காக காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிக் மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு சுமார் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைக்காக காத்திருப்பதாக (வேலையில்லா பட்டதாரிகள்) மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள் என்றும். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய பதிவுதாரர்கள் ஆண்கள். இவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை.