ஆக.5ல் கோட்டை நோக்கி பேரணி... தலைநகரை அதிரவைக்கப் போகும் ஜாக்டோ - ஜியோ
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆகஸ்ட் 5ஆம் லட்சக்கணக்கானோர் சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாக அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும், ஊதிய குழுவின் முரண்பாடுகளை இல்லாமல் அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 5ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்லப்போவதாகவும், ஆகஸ்ட் 22ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த வாரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை அளிக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரியது என்று கூறினர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஆகஸ்ட் 5ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்லப்போவதாகவும், ஆகஸ்ட் 22ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரை பேரணி, வேலை நிறுத்தப்போராட்டம் என்று அதிரவைக்க முடிவு செய்து விட்டனர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர். என்ன செய்யப்போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications