ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ல் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 16-ந் தேதி ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பிறகு கடந்த மாதம் 23-ந் தேதி 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

பின் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் 25-ந் தேதி பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து கடந்த 3-ந் தேதி மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து சபாநாயகராக பொறுப்பேற்ற தனபால் சட்டசபை கூட்டத்தை வரும் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால் வரும் 16-ந் தேதி ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்துவார். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். மொத்தம் 3 அல்லது 4 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.
சிறிது இடைவெளிக்குப் பின்னர் கூடும் சட்டசபை கூட்டத் தொடரில் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படடது. அந்த இறுதி கூட்டத் தொடர் பிப். 20-ந் தேதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications