ஆக்ஷனில் இறங்கிய ஆளுநர் ரவி.. கள்ளச்சாராய மரண விவகாரத்தில் இதுவரை என்ன செஞ்சீங்க? அரசுக்கு கடிதம்!
சென்னை : கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சித்தாமூர் புத்தூர் பகுதியை சேர்ந்த ஜம்பு, கயப்பாக்கம் சங்கர், பெருங்கரணை முத்து ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிவாரண உதவிகளை அவர்களது வீடுகளுக்கே சென்று அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.
கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கள்ளச்சாராய பலி விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது என்பது பற்றி விரிவான அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி அந்த கடிதத்தின் வாயிலாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications