மதுக்கடைகளை மூட முடியாது... கள்ளச்சாராயம் பெருகும்... சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
சென்னை: மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியுமா ? முடியாதா ? என்று தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினார். மேலும் பேசிய அமைச்சர் விஸ்வநாதன் மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்றார்.

மேலும் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் உள்ளதால் தமிழகத்தில் மட்டும் மூட முடியாது என்றும் கூறினார். மதுக்கடைகளை மூடுவதால் மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறிய நத்தம் விஸ்வநாதன், அந்த வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்தால் மதுக்கடைகளை மூடுவதை முதல்வர் ஜெயலலிதா ஆதரிப்பார் என்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உண்ணாவிரதம் இருந்து செல்போன் டவரில் ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதனையடுத்து போராட்டங்கள் தீவிரமடையவே, தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதுவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் துரைமுருகன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications