போலீஸ் பக்ருதீன் விவகாரம்.. கைது செய்தது யார் ..? - தமிழக அரசு கோர்ட்டில் விளக்கம்!
சென்னை: போலீஸ் பக்ருதீனைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் யார் என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனை கடந்த 4-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் பக்ருதீன் கைது விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் கருணாநிதியும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில்,இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.அப்துல் ரஹீம் ஒரு மனு தாக்கல் செய்தார்.

என்கவுண்டருக்குத் திட்டமா...
அதில், என்னுடைய நண்பர் போலீஸ் பக்ருதீனை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதை போலீசார் உறுதி செய்ய மறுக்கின்றனர். எனவே அவரை என்கவுண்டர் மூலம் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியிருந்தார்.

அரசு அளித்த விளக்கம்
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, பக்ருதீனை கைது செய்துள்ளதாகவும், கைது குறித்து பக்ருதீனின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி முன்பு கடந்த 23-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை
அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பக்ருதீன் கைது சம்பவத்தில் தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே தமிழக போலீசார் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதம் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

லட்சுமணன், ரவீந்திரன், வீரக்குமார் கைது செய்யவில்லை
அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், போலீஸ் பக்ருதீனை இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன், வீரகுமார் ஆகியோர் கைது செய்யவில்லை.

அண்ணாதுரைதான் கைது செய்தார்
அவர்கள் 3 பேரும் பக்ருதீனை பிடித்து வைத்திருந்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சென்று, பக்ருதீனை கைது செய்தார். அதே நேரம், பக்ருதீனை கைது செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு சன்மானம் வழங்கியது.

அண்ணாதுரைக்கு ரூ. 1 லட்சம் தர உத்தரவு
ஆனால் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு சன்மானம் வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறுவது தவறு. அண்ணாதுரைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

உடலில் காயம் இல்லை
போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டபோது, அவரது உடலில் காயம் எதுவும் இல்லை. பக்ருதீன் கண்ணில் உள்ள காயத்துக்கு போலீஸ்தான் காரணம் என்று மாஜிஸ்திரேட்டிடம் அவர் புகாரும் செய்யவில்லை.

தீவிரவாதி என்பதால் சாட்சிகள் வரவில்லை
பக்ருதீன் கைது செய்யப்படும்போது, பொதுமக்களிடம் சாட்சி கையெழுத்து வாங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. பக்ருதீன் தீவிரவாதி என்பதால், பொதுமக்கள் சாட்சி கையெழுத்திட முன்வர விரும்பவில்லை.

மறு நாள் தாயாருக்குத் தகவல்
அக்டோபர் 4-ந் தேதி பக்ருதீன் கைது செய்யப்பட்டது குறித்து மறுநாள்தான் அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த காலதாமதத்துக்கு காரணம், பக்ருதீனின் கைது குறித்த தகவலை அவரது உறவினர்கள் பெற மறுத்துவிட்டார்கள். அதனால், அவரது தாயாருக்கு காலதாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

விதிமீறலே இல்லை
எனவே பக்ருதீன் கைது சம்பவத்தில் எந்த விதிமுறைகளையும் போலீசார் மீறவில்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications