பொங்கல் பரிசு... அடடா.. கரும்புல "அம்மா" ஸ்டிக்கர் ஒட்ட மறந்துட்டீங்களேப்பா..!
சென்னை: தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுடன் 2 அடி கரும்பும் தருகிறார்கள். ஆனால் அதில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படாதது பலரது கண்களையும் "உறுத்துவதாக" உள்ளது.
வெள்ளை கார்டோ பச்சை கார்டோ எல்லா கார்டும் வாங்க வேட்டி சேலை வாங்கிக்கங்க என்று சொன்னவர்கள், அரிசி கார்டுக்கு மட்டும் பொங்கல் பரிசு தரப்படும் என்று அறிவித்து விட்டனர். இது என்னைப்போன்ற வெள்ளை கார்டு வைத்துள்ளவர்களுக்கு சற்றே கவலையான விசயம்தான். பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு பையில் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் ரூ.100 கொடுக்கும் கவரில் ஜெயலலிதா படம் ஒட்டியவர்கள், கரும்பில் ஸ்டிக்கர் ஒட்ட முடியலையே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்து வீட்டில் இருந்தார். தற்காலிக முதல்வராக கண்ணீருடன் பதவியேற்ற ஒ.பன்னீர் செல்வம், மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ பரிசு பை கொடுக்கவில்லை. இந்த ஆண்டு வெள்ளத்தில் வீடு இழந்த மக்கள் தவித்துக்கொண்டிருக்க வெள்ள நிவாரணத்துடன் அரசு பொங்கல்பரிசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இரண்டடி கரும்பும் கொடுப்பதுதான் கூடுதல் பரிசு. 150 ரூபாய் தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 100 ரூபாய்தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

அம்மாவின் உத்தரவுப்படி
பொங்கல் பரிசை ஜெயலலிதா துவக்கி வைக்க அவரது உத்தரவு படி, ஏழை மக்களுக்கு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மாநிலம் முழுவதும் வழங்கத்தொடங்கியுள்ளனர். இதனால் ரேசன் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. இது நியாயவிலை விற்பனையாளர்களுக்கு கூடுதல் சுமைதான்.

ஆர்.கே.நகரில் அமைச்சர் வளர்மதி
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நியாய விலை கடைகளில் ஏழைகளுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.சென்னை ஆர்.கே. நகர் தொகுதி தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, ரூ. 100 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர்.

ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம்விளக்கு தொகுதி அபிபுல்லா சாலையில் உள்ள டி.யு.சி.எஸ். நியாய விலைக்கடையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., புஷ்பாநகர் ஆறுமுகம் எம்.சி., 113வது வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர், யு.கற்பகம் எம்.சி., முத்துபரணி, கூடுதல் பதிவாளர் பாலமுருகன், சென்னை பிராந்திய கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வன், டி.யூ.சி.எஸ். பி.சீனிவாசன், லிபர்டி ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் அமைச்சர் சின்னையா
முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பொங்கல் பண்டிகையொட்டி காஞ்சீபுரம் வாலாஜாபாத்தில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கம் ரூ100 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்ட காக்களூர் சாலையில் அமைந்துள்ள மா.பொ.சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாயவிலைக் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசினை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

விழுப்புரம் கடலூர்
விழுப்புரம் பெரியார் நகரில் பொங்கல் தொகுப்பு சிறப்பு பரிசை கலெக்டர் எம்.லட்சுமி, எம்.பி.க்கள் டாக்டர் இரா. லட்சுமணன், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். கடலூர் மாவட்ட சரவணபவா கூட்டுறவு அங்காடியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் வழங்கினார்.

6,83,685 கார்டுகள்
கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 460 அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 1,791 காவலர் குடும்ப அட்டைகள், 434 இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் ஆக மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரத்து 685 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு மற்றும் ரொக்கம் ரூ.100 ஆகியவை 1,129 முழு நேர நியாய விலைக்கடைகள், 276 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 9 மகளிர் சுய உதவிக்குழு நியாய விலைக்கடைகள் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 145 நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஆட்சியர் சுரேஷ்குமார்.

திருவண்ணாமலை வேலூர்
வேலூர் கற்பகம் சிறப்பு பல்பொருள் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி, நியாய விலைக் கடையில் ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

ஸ்டிக்கர் மயம்
வெள்ள நிவாரணத்தில் ஆரம்பித்த ஸ்டிக்கர் கலாச்சாரம் பொங்கல் பரிசிலும் தொடர்ந்தது. பரிசுப்பை, ரூ.100 கொடுத்த கவரில் ஜெ படம் இருந்தது நல்ல வேலையாக 2 அடி கரும்பில் ஸ்டிக்கர் ஒட்ட முடியவில்லை. இதுதான் இப்போது அமைச்சர்களின் கவலையாக உள்ளது.
|
இலவசத்தில் இலவசம்
பொங்கல் பரிசு இலவசம்தான் அதில் இலவச இணைப்பாக அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவார்களோ என்று சமூக வலைத்தளங்களில் பலரும் சந்தேகம் கிளப்பியிருந்தனர். நல்லவேளையாக 2 அடி கரும்பில் ஸ்டிக்கர் ஒட்டாமல்தான் கொடுத்தார்கள். அடுத்த ஆண்டு முழு கரும்பு கிடைக்குமா? என்பதுதான் பலரின் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications