நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் ரவிச்சந்திரன் உடல் நல்லடக்கம்: ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி
கிருஷ்ணகிரி: ஒடிசாவில் நக்சல் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ரவிச்சந்திரனின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
ஒடிஸா மாநிலம் சிந்தாதுளி கிராமத்தில் நக்சல் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிராமத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.அபிலாஷ் ஆகியோர் ஆவர்.
எம்.ரவிச்சந்திரனின் உடல் அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும், அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ரூ.10 லட்சம் நிதி உதவி
முன்னதாக வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ரவிசந்திரன் உடலுக்கு அமைச்சர் பழனியப்பன் மலரஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், இன்று ரவிச்சந்திரன் மனைவி யசோதாவிடம் இன்று வழங்கினார்.