2ம் வகுப்பு வரை "நோ ஹோம் ஒர்க்".. பள்ளிகளுக்கு அரசு கண்டிப்பான உத்தரவு
Recommended Video

சென்னை: 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று பள்ளிகளுக்கு தமிழக அரசு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 29ம் தேதி பிறப்பித்த உத்தரவில் 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இதை பல பள்ளிகள் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளது. அதில் உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து அனைத்துப் பள்ளிகளும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சர்க்குலரில், 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளும் மதித்து நடக்க வேண்டும்.
அதேபோல அனைத்துப் பள்ளிகளும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் எடை குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை கண்டிப்பாக அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றி நடக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழான பாடப்புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். வேறு பாடப் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது.
இந்த உத்தரவுகள் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி அதிகாரிகள், பள்ளிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தி, இதை தீவிரமாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களிடம் இந்த உத்தரவுகளை தெரிவித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டுக்களைப் பெற்று அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications