கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு திருவிழா... தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழு நிலவு அன்று கண்ணகி கோவில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து தேக்கடியில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கம்பம்: தமிழக - கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது கண்ணகி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முழு நிலவு நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோவில் விழாவில் இரு மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் திரளாக பங்கேற்பது வழக்கம்.
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு திருவிழா எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
உயர் அதிகாரிகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி-இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளனர்.
விழாக் குழுவினர்
தேக்கடி ராஜீவ்காந்தி அரங்கில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் விழா குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.
வனப்பாதுகாப்பு
வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திருவிழாவை நடத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.