“CM விஜய்க்கு நான் போன் பண்ணி வாழ்த்து சொன்னேன்!”.. சிவகார்த்திகேயன் பேட்டி! பழைய சர்ச்சைகளுக்கு பதிலா?
சென்னை: நடிகராக இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் பதவிவரை உயர்ந்திருக்கும் விஜய் குறித்து தற்போது எல்லா தரப்பிலும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. சினிமா உலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து, மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியல் களத்தையே தலைகீழாக மாற்றியிருக்கும் விஜயின் வெற்றி இன்னும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

சேயோன் படம் துவக்கம்
சிவகார்த்திகேயன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் மதுரை பின்னணியில் அமைந்த கதைகளில் நடித்துப் பெரிய வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயன், மீண்டும் அதே மாதிரியான ஒரு கதைக்களத்துடன் "சேயோன்" படத்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது செய்தியாளர்கள் அவரை சந்தித்து பல கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அனைவரும் எதிர்பார்த்த கேள்விதான் முன்வைக்கப்பட்டது. "புதிய முதலமைச்சர் விஜயின் ஆட்சி எப்படி இருக்கிறது சார்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன் மிகவும் இயல்பாக பதில் அளித்ததார்.
சிவகார்த்திகேயன் பேட்டி
"ரொம்ப நல்லா இருக்கு. எங்க துறையில் இருந்த ஒருவர் முதலமைச்சராகியிருப்பது எங்களுக்கு பெருமை. ரொம்ப சந்தோஷம். அவர் வெற்றி பெற்ற உடனே நான் அவருக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்னேன். அவர் இப்போதும் அதே பழைய மாதிரியே அமைதியாக இருந்தார். மிகவும் சாதாரணமாக தேங்க்யூ சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். அதோடு என்ன பண்ணுறீங்க என்றும் கேட்டார்" என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
இந்த ஒரு பேச்சே தற்போது பல விவாதங்களை கிளப்பியுள்ளது. காரணம், கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் விஜய் - சிவகார்த்திகேயன் உறவு குறித்து பல விதமான பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தன.
குறிப்பாக விஜய் அரசியலுக்கு முழுமையாக செல்லப்போகிறார் என்ற பேச்சு தொடங்கியபோது, "அடுத்த கட்டத்தில் தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப்போகிறாரா?" என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதிலும் GOAT படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல ஒரு காட்சி வந்தபோது, அதை பல ரசிகர்கள் "வாரிசு அரசியல்" போலவே சினிமாவிலும் அடையாளமாக எடுத்துக்கொண்டனர். "இனி இந்த இடத்தை நீங்க பிடிங்க" என்று விஜய் சொல்லாமல் சொன்னதாக ரசிகர்கள் பலரும் பேசினர்.
விஜய் சிவகார்த்திகேயன் பிரச்சனை
ஆனால் அதற்குப் பிறகு நிலைமை வேறொரு திசைக்கு போனது. விஜயின் அரசியல் படம் ஜனநாயகம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் அதே சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் கிளம்பியது.
சில விஜய் ரசிகர்கள், "விஜயின் படத்துடன் மோத சிவகார்த்திகேயன் திட்டமிட்டு வந்திருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல கருத்துகளும் பதிவாகின. சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே விஜயை டார்கெட் செய்கிறார் என்ற அளவுக்கு பேசப்பட்டது.
ரசிகர்கள் ஆதங்கம்
ஆனால் பின்னர் சூழ்நிலை மாறியது. அறிவிக்கப்பட்ட தேதியில் ஜனநாயகம் வெளியாகவில்லை. அதேபோல் பராசக்தி படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அந்த சர்ச்சை மட்டும் நீண்ட நாட்கள் பேசப்பட்டது.
அந்த பின்னணியில்தான் இப்போது சிவகார்த்திகேயன் "நான் விஜய்க்கு நேரடியாக கால் பண்ணி வாழ்த்து சொன்னேன்" என்று வெளிப்படையாக கூறியிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதை பலர், "விஜய்க்கு எதிராக நான் இல்லை" என்ற மெசேஜாகவே பார்க்கிறார்கள்.
மேலும் சினிமா உலகிலிருந்து வந்த ஒருவர் தமிழக முதலமைச்சராகியிருப்பது மற்ற நடிகர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது என்றும் பேசப்படுகிறது. காரணம், இதுவரை நடிகர்களின் அரசியல் முயற்சிகள் பல இருந்தாலும், இப்படி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு சென்றிருப்பது பெரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த பேச்சுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "இதோ எல்லா சர்ச்சைக்கும் full stop", "விஜய் - சிவகார்த்திகேயன் இடையே எந்த பிரச்சனையும் இல்லை", "ரசிகர்கள்தான் unnecessary ஆக சண்டை போட்டாங்க" என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், ஒரு சாதாரண வாழ்த்து போன் காலாக இருந்தாலும், சிவகார்த்திகேயன் பேசிய இந்த சில வார்த்தைகள் பழைய பல சர்ச்சைகளுக்கு மறைமுக பதிலாக மாறியிருக்கிறது.













Click it and Unblock the Notifications