திறந்த நிலை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ்: ஜெயலலிதா உத்தரவு

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், கல்வியைத் தொடர முடியாத இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கல்விக்கான மற்றுமொரு வாய்ப்பை அளிப்பதுடன் அவர்களது ஆளுமையின் வளர்ச்சிக்கு உதவி செய்து, சமுதாய மேம்பாட்டிற்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் துணை புரியக்கூடிய சமுதாயக் கல்லூரிகளை நடத்தி வருகிறது.
சமுதாயக் கல்லூரிகளின் கற்பிக்கும் முறை முற்றிலும் மாறுபட்ட புதிய கல்வி முறையாகும். இதன் மூலம் வெவ்வேறு சூழ்நிலைகளினால் பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்களுக்கு தொடர்ந்து தேவைகளுக்கு ஏற்ப மேலும் படிக்கக் கூடிய வாய்ப்பை தரக்கூடிய கல்லூரிகளாகவும், மாணவ சமுதாயத்தில் பொதிந்து கிடக்கின்ற எண்ணற்ற திறமைகளையும், ஆற்றல்களையும் முழுமையாக வெளிக்கொணரக் கூடிய வகையில் நகர்ப்புற சமுதாயக் கல்லூரிகள், கிராமப்புற சமுதாயக் கல்லூரிகள், பெண்கள் சமுதாயக் கல்லூரிகள், பழங்குடியினர் சமுதாயக் கல்லூரிகள், சிறைச்சாலை சமுதாயக் கல்லூரிகள், எய்ட்ஸ், எச்.ஐ.வி. நோயாளிகளுக்கான சமுதாயக் கல்லூரிகள் என ஆறு வகையான சமுதாயக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இச்சமுதாயக் கல்லூரிகள் வாயிலாக ஆடைகள் வடிவமைத்தல் பட்டயம், ‘பிளம்பிங்' தொழில் நுட்பப் பட்டயம், வீட்டு மின்இணைப்பாளர் பட்டயம், கணினி பயன்பாட்டில் பட்டயம், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்த்தல் பட்டயம் போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுவதைப் போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கும், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகையினை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார். இந்த பயணச் சலுகை மூலம் சுமார் 6,000 மாணாக்கர்கள் பயன் பெறுவார்கள்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications