"சக்தி" மயமாகும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள்...!
சென்னை: தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெண்கள் மயமாக உள்ளது. வரும் உள்ளாட்சி்த் தேர்தலில் பாதிக்குப் பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ளதால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அப்படியே அதிகரிக்கவுள்ளது.
தற்போது தமிழகத்தில் 1.32 லட்சம் உள்ளாட்சி பதவியிடங்கள் உள்ளன. இதில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தற்போது மூன்றில் ஒரு பங்கு இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதை மாற்றி 50 சதவீத இடங்கள் வரும் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கடந்த சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றியது என்பது நினைவிருக்கலாம். அந்த சட்டத் திருத்தம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கை கடந்த மே 23ம்தேதி மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடியால் வெளியிடப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கடந்த பிப்ரவரி மாதமே ஆளுநர் ரோசய்யா ஒப்புதல் வழங்கி விட்டார்.
கடந்த 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே நிர்ணயிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடத்தை விட கூடுதலான பெண்கள் பிரநிதித்துவம் பெற்றிருந்தனர் என்பதால் இந்த முறை பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் நிரம்பியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 10 மேயர்களில் 6 பேர் பெண்களாக இருந்தனர். 125 நகராட்சித் தலைவர்களில் 54 பேர் பெண்களாக இருந்தனர். அதேபோல பஞ்சாயத்து வார்டுகளிலும் பெண்களின் அளவு 41.97 சதவீதமாக இருந்தது. பஞ்சாயத்துத் தலைவர்களில் 39.28 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். வார்டு உறுப்பினர்களில் 39.28 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு பெரிய அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கவுள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications