தமிழகத்தில் மலிவு விலையில் இன்டர்நெட் செவை! இணைய வசதியில் கேரளாவை போல தலைகீழ் மாற்றம் ஏற்படுமா!
சென்னை: அனைவருக்கும் மலிவு விலையில் இணைய சேவை வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இது இணைய வசதியில் கேரளாவை போல தலைகீழ் மாற்றம் ஏற்படுமா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
கேரளாவில் கே-ஃபோன் என்கிற பெயரில் அரசு சார்பில் வீடுதோறும் இன்டெர்நெட் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மிக குறைவான விலையிலும், ஏழைகளுக்கு இலவசமாகவும் இந்த இன்டெர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் பிடிஆர் பேசியது என்ன?
"தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக வீடுகள் தோறும் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படும். சுமார் 100Mbs வேகத்தில் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படும். இதுவரை 4700 கிராம பஞ்சாயத்துகளிலிருந்து இணைய சேவை வேண்டும் என்று விண்ணப்பம் வந்திருக்கிறது. இணைய சேவை பெற வசதியான இடங்கள் எது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சேவை வழங்கப்படும்" என கூறியிருக்கிறார்.
கேரளா முன்னோடி:
வீடுகள் தோறும் இணைய சேவை என்கிற விஷயத்தில் கேரளா தேசிய அளவில் முன்னோடியாக இருக்கிறது. கேரள பைபர் ஆப்டிக் நெட்வொர்க்(கே-ஃபோன்) என்கிற நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையிலும், ஏழைகளுக்கு இலவசமாகவும் இணைய சேவையை வழங்குவதுதான். இதன் இலக்கு 20 லட்சம் குடும்பங்கள் மற்றும் 30000 அரசு அலுவலகங்களாகும்.
டார்கெட் இதுதான்
அரசு அலுவலகங்கள் என்று சொன்னால், அரசு பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கிராமங்களில் உள்ள அலுவலகங்களுக்கு முதற்கட்டமாக இணைய சேவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகங்களுக்கு 100 Mbs முதல் 1 Gbps வரை இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஏழை குடும்பங்களுக்கு 1.5Mbs வேகத்தில் இலவசமாகவும் இணைய சேவை வழங்கப்பட்டிருக்கிறது. சரி எல்லாமே இலவசமாக கொடுத்தால் எப்படி இந்நிறுவனம் லாபமடையும் என்று கேள்வி எழலாம்.
இதற்காக கே-ஃபோன் வேறு திட்டத்தை வைத்திருக்கிறது. அதாவது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறது. 20Mbps - 250 Mbps வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது. இதற்கான கட்டணமாக ரூ.299 முதல் வசூலிக்கப்படுகிறது. கேரளாவில் மொத்தம் 35,000 கிமீ நீளத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் இணைய சேவையில் தலைக்கீழ் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இணைய சேவையை எளிதில் அணுக வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. இணைய சேவையை அணுகுவது என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்கிற நோக்கத்தில் சேவை வழங்கப்பட்டிருப்பதால்தான் இது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் இது சாத்தியமா?
TACTV திட்டம் மூலம் இணைய சேவையை வழங்க தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 2020-2021 காலத்தில், அதாவது கேரளாவுக்கு முன்னரே இந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் இன்று வரை தமிழ்நாட்டில் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள்தான் இணைய சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. TACTV திட்டம் பெயரளவுக்கு மட்டுமே இது செயல்பாட்டில் இருக்கிறது.
TACTV திட்டத்தில் BSNL மற்றும் BharatNet உடன் இணைந்து ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இணையம் வழங்கப்படும். இதற்கான கட்டணம் குறைந்தபட்சமாக வசூலிக்கப்படும். இதை விரிவுப்படுத்துவது குறித்துதான் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார். அவர் கூறியதை போல எப்போது தமிழ்நாட்டில் இணைய சேவை மலிவு விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
காரணம் இன்றும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இணைய சேவையை அணுகுவது சவாலானதாக இருக்கிறது. மொபைல் 4ஜி நெட்வொர்க் மட்டுமே கிடைக்கிறது. தனியாக ஆப்டிக் கேபிள் இழுத்து இணைய வசதியை செய்துக்கொள்ள கிராம மக்களால் முடியாது. எனவே விரைவில் அரசு இதை சாத்தியமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சாத்தியமாக்கினாலும் அது கேரளாவை போல இணைய வசதி கிடைப்பதில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது பெயரளவுக்கு மட்டுமே இருக்குமா என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications