தைரியம், திராணி இருந்தால் தே.மு.தி.க தனித்து போட்டியிடுமா: அமைச்சர் வைத்திலிங்கம் சவால்!
சென்னை: தேமுதிகவுக்கு தைரியம், திராணி இருந்தால் தனித்துப் போட்டியிடுமா என்று சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் சவால்விட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசினார்.
ஏற்றம் தந்த கேப்டன்
அவர் தனது உரையில் ‘‘எங்களுக்கு ஏற்றம் தந்து ரசித்து கொண்டிருக்கும் கேப்டன் அவர்களே...'' என்று குறிப்பிட்டார்.

எதுங்க ஏற்றம்?
உடனடியாக அமைச்சர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, ‘‘ஏற்றம் என்று சொல்கிறீர்களே... எது ஏற்றம்? லோக்சபா தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏற்றமா? பல தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது ஏற்றமா? உங்கள் தலைவரின் தகுதி என்ன என்பது தேர்தலில் மக்களுக்கு தெரிந்து விட்டது.
தனித்துப் போட்டியிடுங்க..
இனி யாரும் உங்களை சீண்ட மாட்டார்கள். உங்கள் கட்சிக்கு தைரியம், திராணி இருந்தால் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு 1000 ஓட்டாவது வாங்க முடியுமா? என்றார்.
எம்.ஜி.ஆரை தவிர..
இதற்கு பதிலளித்த தேமுதிக எம்.எல்.ஏ. வெங்கடேசன், ‘‘தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை தவிர தொடர்ந்து யாரும் ஆட்சி நடத்தியதில்லை'' என்றார்.
கூட்டணி வைத்தவர்தானே..
அதற்கு குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் நத்தம் விசுவநாதன், ‘‘தனித்துப் போட்டியிட தே.மு.தி.க.வுக்கு தகுதி உள்ளதா என்று தான் அமைச்சர் கேட்டார். உங்கள் கட்சி தலைவர்கள் மக்களோடும், ஆண்டவனோடும் கூட்டணி என்றார். என்றாலும் கடைசியில் கூட்டணி வைத்துக் கொண்டாரே என்றார்.
இந்த விவாதத்தால் சட்டசபையில் சூடு பறந்தது.












Click it and Unblock the Notifications