ப.சிதம்பரத்துக்கு சட்டசபையில் செம 'டோஸ்' விட்ட தமிழக அமைச்சர்!!
சென்னை: தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறது என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவோ இன்று சட்டசபையில் ப.சிதம்பரத்தை வறுத்தெடுத்துவிட்டார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் எம். குணசேகரன், சிவகங்கை தொகுதியில் இருந்து எம்.பி.யான மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கும் உதவவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் செயல்பாடுகள் குதிரையை குப்புறக் கவிழ்த்து குழிபறித்த கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை.
60 சதவீத சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே கடன் பெறுகின்றனர். அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை வணிக வங்கிகளுக்கும் வழங்க ப. சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார் என்றார்.