ஆளுநர் மாளிகையில் பிரதமரை சந்தித்த அமைச்சர் தங்கமணி!
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் தங்கமணி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை : சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் தங்கமணி தனியாக சந்தித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த அவர், கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழா உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு பிரதமர் தங்கியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல. கணேசன் எம்பி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர். பிரதமரை அனைத்துக்கட்சியினர் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பிரதமரை தனிப்பட்ட முறையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார். அதிமுக பிளவு பட்டிருந்த காலத்திலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்த போது டெல்லிக்கு அடிக்கடி சென்று பிரதமரை சந்தித்து வந்தவர்கள் அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும்.
அதிமுகவின் இரு அணிகள் மத்தியில் இப்போது சிறு சிறு சச்சரவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமரை அமைச்சர் தங்கமணி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications