ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தால் தான் தாடி எடுப்போம்... அதிமுகவினரின் புதிய சபதம்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறையில் இருப்பதால், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் சோகமான முகத்துடன் தாடியுடன் வலம் வருகின்றனர்.
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வரும் வரை இப்படித்தான் இருக்கப் போகிறார்களாம் அதிமுகவினர்.
18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை இழந்தார் ஜெயலலிதா. தற்போது அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
புதிய முதல்வர்...
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் இழந்ததால், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீர் மல்க பதவியேற்றது.
முயற்சிகள் தோல்வி...
கைது செய்யப் பட்ட சில நாட்களிலேயே எப்படியும் ஜெயலலிதாவை வெளியில் கொண்டு வந்து விட வேண்டும் என அதிமுகவினர் அரும்பாடு பட்டனர். ஆனால், அவர்களது முயற்சிகள் பலிக்கவில்லை.
அதிருப்தியை உண்டாக்கும் போராட்டங்கள்...
மற்ற துறையினரோடு சேர்ந்து தொடர்ந்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், அதுவும் பலன் கொடுப்பதாகத் தெரியவில்லை. அதிமுக மீது மக்களின் அதிருப்தியை அதிகப் படுத்தும் விதமாகவே அவை அமைந்து வருகிறது.
தாடியுடன் கூட...
இந் நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பலர், கடந்த சில நாட்களாக தாடியுடனேயே காணப் படுகின்றனர்.
முக்கிய அமைச்சர்கள்...
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் போன்ற பல அமைச்சர்கள் தாடியுடனே காணப்படுகின்றனர். அவர்களது அலுவலகத்தில் உள்ள சிலர்கூட தாடியுடன் உள்ளனர்.
தாடி வளர்க்கும் போராட்டம்...
ஜெயலலிதா ஜாமீனில் வெளிவரும் வரை தாடியுடன் இருக்க அவர்களில் சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மொட்டை இதில் கணக்கில் சேராதோ
ஆனால் மறுபக்கம் ஒரு தரப்பு அதிமுகவினர் மொட்டை அடித்தபடி இருக்கின்றனர். அடித்தால் மொட்டை.. வைத்தால் தாடி என்பதுதான் இப்போதைக்கு அதிமுகவின் கொள்கை போல.