தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்: விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்
தஞ்சாவூர்: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார்.

கூட்டத்திற்கு பிறகு தெய்வசிகாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி நீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத நாட்டின் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தேவை இல்லை. தமிழக அரசு விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. கர்நாடக அரசு கடந்த 5 ஆண்டுகளாக காவிரியில் இருந்து நீரை திறந்துவிடாமல் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பாதிக்க செய்துவிட்டது.
ஆளும் அதிமுகவுக்கு 50 எம்.பி.க்கள் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து காவிரி நீரை பெற தவறிவிட்டது. கர்நாடக முதல்வரோ அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக விவசாயிகள் என பலரையும் சந்தித்து பேசுகிறார்.
தமிழக முதல்வரோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க மறுக்கிறார். விவசாயிகளை சந்திக்கவும் மறுக்கிறார். இனிமேலாவது தமிழக அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக விவசாயிகள் லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் என்று கூறிய அமைச்சர் கருப்பண்ணனை முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கருப்பண்ணன் தனக்கு பழக்கமுள்ள பணக்கார விவசாயிகளை வைத்து தஞ்சையில் ஒரு கிளை துவங்கி விவசாயிகளுக்கு கடன் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications