முல்லைப் பெரியாறில் புதிய அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். எதிர்ப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறில் 152 அடி அளவுக்கு நீரைத் தேக்க அனுமதிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் கேரளா புதிய அணை கட்டுவது குறித்து ஆராய தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் மத்திய அரசின் இந்த அனுமதியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும். இதனால் பிரதமர் இதில் தலையிட்டு சர்ச்சைக்குரிய அந்த உத்தரவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.