மவுலிவாக்கம் கட்டிட விபத்து விவகாரம்: திமுக உட்பட 7 கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு!
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதி மறுத்ததால் திமுக, தேமுதிக, இடதுசாரிகள் உட்பட 7 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தே.மு.தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்தது குறித்து பேச அனுமதி கோரினர்.

சட்டசபை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து கொடுக்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானம் பற்றி பேச அனுமதி கேட்டார்.
சபாநாயகர் தனபாலன்: அந்த பிரச்சினை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன், புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது.
அமைச்சர் வைத்திலிங்கம்: இந்த பிரச்சினைக்கு நான் பதில் அளிக்கும் வரை பொறுத்திருந்து அதை கேட்டு விட்டு தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் (இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதுபற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தனர்).
அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்: அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று குழப்பம் விளைவிப்பது நியாயம் அல்ல. கட்சியில் ஒருவர் தங்கள் கோரிக்கையை எடுத்து சொல்லலாம்.
சபாநாயகர்: சட்டமன்ற விதி 66-ன் படி ஏற்கனவே விசாரணை நடைபெறும் ஒரு பொருள் குறித்து சட்ட மன்றத்தில் விவாதிக்க முடியாது. அமைச்சர் தனது உரையில் உங்களுக்கு பதில் அளிப்பார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேச அனுமதி கேட்டனர்.
சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க., மற்றும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நின்றபடி இருந்தனர்.
அமைச்சர் வைத்திலிங்கம் கூறும் போது, ‘‘ஓடுகாலிகள் வெளியே சென்று விட்டார்கள். நீங்கள் அமர்ந்து என் பதிலை கேளுங்கள்'' என்றார். ஆனாலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேறினர்.
அவர்களை தொடர்ந்து காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தே.மு.தி.க. உறுப்பினர் அருள் சுப்பிரமணியம், பா.ம.க. உறுப்பினர் கலையரசன் ஆகியோர் சபையில் அமர்ந்து இருந்தனர்.
வெளிநடப்பு ஏன்? ஸ்டாலின் விளக்கம்
சட்டசபையில் இருந்து வெளியேறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்று சுவர் இடிந்து 11 பேரும் உயிர் இழந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய துயர சம்பவம் இதுகுறித்து சட்டசபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் அனு மதிக்கவில்லை.
அமைச்சர் வைத்திலிங்கம் தெம்பும், திராணியும் இருந்தால் என் பதிலை கேளுங்கள் என சவால் விடுக்கிறார். முதல்வர் ஜெயலலிதா இந்த விபத்து குறித்து பேட்டி அளித்த போது சி.எம்.டி.ஏ. எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே அவர் அமைத்துள்ள விசாரணை கமிஷனும், சிறப்பு புலனாய்வு குழு அனைத்துமே வெறும் கண் துடைப்பு. எனவே உண்மையை அறிய சி.பி.ஐ. விசாரணை தேவை. இதை வற்புறுத்தவே சபையில் விவாதிக்க அனுமதி கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி தரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications