தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் – 18 ஆம் தேதி மறக்காம போட்டுடுங்க!
சென்னை: தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 18 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பில், " கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முதல் தவணை முகாம் ஜன. 18 ஆம் தேதியும், 2 ஆம் தவணை முகாம் பிப்ரவரி 22 ஆம் தேதியும் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 68 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜன. 18 ஆம் தேதியும் பிப்ரவரி 22 ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முதல் தவணை சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாளில் சென்னையில் 6.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இதற்காக 1502 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
அதேபோல, ரயில், பேருந்து நிலையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் பணிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவெளியின்றி நடைபெறும்" என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.