தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை- தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழக தலைவர்கள் உற்சாகமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சென்னை: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழக தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நாளை இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடவுள்ளனர்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்து செய்தியில், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி, வளர்ச்சி, செழுமை பெற வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாம் போதிக்கும் அன்பு, கருணை, இரக்கம், பணிவு போன்ற நற்குணங்களை கடைபிடித்து, மனிதநேயத்துடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது வாழ்த்து செய்தியில், இறைதூதர் இப்ராஹீமின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி தியாகத்தை போற்றும் நல்லதொரு நாள் இந்நாள் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்தியில், இந்தியா முழுவதிலும் மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினை வாதம் தலையெடுக்கும் நிலையில், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம் என்று கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நன்நாளில் மதச்சார்பின்மையை காக்கவும், சமயநல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் உறுதியேற்போம் என வைகோ வாழ்த்து கூறியுள்ளார்.