ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க இயலாது- தமிழக அரசு கொண்டுவரலாம்- நிர்மலா சீதாராமன்
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க இயலாது; ஆனால் தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இதேகோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இதனிடையே சென்னையில் தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசால் எந்த ஒரு அவசர சட்டமும் கொண்டுவர முடியாது. ஆனால் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும்.
அப்படி தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தால் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.